வறட்சிக்கான வரப்பிரசாதம் மாதுளை மரம்
மாதுளை மரம் வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளர்ந்து பலன்தரவல்ல ஒரு சில பழமரங்களில் ஒன்று. அதிக லாபத்தையும் சாகுபடியாளருக்கு இது பெற்றுத் தரும்.
அதிக பாசனமும், உழைப்பும் இல்லாமல், முதலீடு அதிகம் செய்யாமலும் விளையும் ஒரு மாதுளம் பழம் சராசரியாக முப்பது ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. இதுவே மாதுளையின் தனிச் சிறப்பு.
ஒரு குறிப்பிட்ட மண்வகை தான் என்றில்லாமல் களரி மற்றும் உவர் மண்ட உட்பட எல்லா வகையான மண்ணிலும் செழித்து வளரும் இயல்புடையது இது. இதற்கான தண்ணீர் தேவையும் குறைவு.
சமவெளிப் பகுதிகளில் மட்டுமில்லாமல் 5900 அடி வரை உயரமுள்ள மலைப்பகுதிகளிலும் இது வளரும். இந்த அளவிற்கு மாறுபட்ட தட்ப வெப்பநிலைகளை தாங்கிக் கொண்டு வளர்ந்து பலன்தரக் கூடியது.
குளிர் மிகுந்த பனிக்காலமும், வறண்ட கோடையும் மாதுளை செழித்து வளர்ந்து பலன் தர ஏற்ற சூழ்நிலையாகும். ஆப்கானிஸ்தானில் இப்படிப்பட்ட கால நிலை நிலவுவதால் தான் காபூல் மாதுளையை மற்ற பகுதிகளில் விளையும் மாதுளை ரகங்களால் இன்று வரை வெல்ல முடியவில்லை. வறண்ட கோடையும் குளிர் மிகுந்த பனிகாலமும் பழத்தின் சுவையை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
மாதுளஞ்செடிகள் நடவு செய்து நான்கு ஆண்டுகளில் பலன் தரத் தொடங்கும் எனினும் முழுப்பலனும் நடவு செய்து ஏழு ஆண்டுகள் கழித்துத்தான் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு 8000 கிலோ முதல் 10000 கிலோ வரை பழ விளைச்சல் கிடைக்கும். தற்பொழுது மாதுளை பழம் விற்கும் விலையுடன் ஒப்பிட்டால் விளைச்சல் விலை மதிப்பு மிகவும் அதிகம் ஆகும்.